நிமிர்வுகள் - 8- கடவுள் காப்பாற்றுவார்!
அப்புக்காத்தரும்…. அன்னம்மாக்காவும்.;..
அப்புக்காத்தர்: அப்பவுக்கும் இப்பவுக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லைத் தானே...
அன்னம்மாக்கா: ஏன்..? இண்டைக்கு என்ன கதை கொண்டுவாறியள்...
அப்புக்காத்தர்: முந்தி அந்தச் சண்டையில இத்தனை பேர் இறப்பு, இந்தக் குண்டுவெடிப்பில இவ்வளவு பேருக்குக் காயம் எண்டு கதைச்சுக் கொண்டிருந்தனாங்கள்…
அன்னம்மாக்கா: ஓமோம்…!
அப்புக்காத்தர்: இப்ப அந்தச் சந்தியில இந்த வாகனத்தில அடிபட்டுக் காயமாம்… உந்த றோட்டில போஸ்ற்றோட மோதிச் சாவாம் எண்டு பாத்து பாத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறம்...
அன்னம்மாக்கா: விடிய வெளிக்கிடக்கயே உதுகள் நேர்ந்து கொண்டுதானே வெளிக்கிட்டு வருகுதுகள்…
அப்புக்காத்தர்: என்னெண்டு… ‘கடவுளே காப்பாற்று’எண்டு கேக்கிறவையோ?
அன்னம்மாக்கா: நல்ல கதை… சாகிறன்… பந்தயம் பிடிஎண்டு கொண்டல்லோ மோட்டச்சைக்கிள முறுக்கிறதுகள்
அப்புக்காத்தர்: அதெண்டாச் சரிதான்… இயமனுக்கே சவால் விடுகிற ஆக்கள் தான்.. “ஏலுமெண்டா உன்ர பாசக் கயித்தைப் போட்டு, இந்தமோட்டச்சைக்கிள நிப்பாட்டு பாப்பம்”எண்டு...
அன்னம்மாக்கா: குழந்தை, குட்டி. குடும்பம் எண்ட நினைப்பும் வாறேல்லையோ உவங்களுக்கு...
அப்புக்காத்தர்: அந்த நினைப்பிருந்தா, கை-கால் வாகன வேகத்தைக் கூட்டுமே…
அன்னம்மாக்கா: அது நாங்கள் செய்யிற பிழை தானே... மழலைகள் நடந்து பழகேக்க, கீழ நிலத்தில விழுந்தா என்ன செய்யிறனாங்கள்?
அப்புக்காத்தர்: பிள்ளையை எழுப்பிவிட்டு, அழுகையைத் தேத்தி, இந்த நிலம் தானே பிள்ளையை விழுத்தினதெண்டு, நிலத்துக்கு இரண்டடி அடிக்கிறனாங்கள்...
அன்னம்மாக்கா: இப்பவும் பிள்ளைகள் அதைத்தானே செய்யுதுகள்...
அப்புக்காத்தர்: என்ன ஒண்டும் விளங்கேல்லை...
அன்னம்மாக்கா: கண்மண் பாராம ஓடி விழுந்து மண்டையை உடைச்சுப்போட்டு, உவன் மகிந்த றோட்டைப் போட்டுத் தமிழர்களைச் சாகடிக்கிறான் எண்டு கொண்டு திரியுதுகள்...
அப்புக்காத்தர்: கடவுள் தமிழரைக் காப்பாற்றுவாரெண்டு நினைக்கிறியளே…
அன்னம்மாக்கா: அவர் ஏன் காப்பாற்றவேணும்? படைச்ச மற்ற உயிர்களெல்லாம் பிரச்சினை இல்லாமல் வாழுதுகள்… அறிவு கூடி, அடிபடுறதுக்கு கடவுள் என்ன செய்யிறது..
----------+------------------+------------------+-------------------------
நெம்பு
நிமிர்வு தை 2018 இதழ்
Post a Comment