இனப்பிரச்சினை என்றால் என்ன?
இலங்கையில் இனப்பிரச்சினை உள்ளது என எல்லோரும் கூறுகின்றனர். ஆனால் இனப்பிரச்சினை என்றால் என்ன? எனக் கேட்டால் எவரிடமும் போதிய விளக்கம் இல்லை. இது தெளிவில்லாததினால் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலும் பல குழப்பமான விளக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. நோய் என்னவென்று தெரிந்தால் தான் அதற்கான மருத்துவத்தை சீராக செய்ய முடியும். அதே போல இனப்பிரச்சினை என்னவென்று தெரிந்தால் தான் அதற்கான தெளிவான தீர்வையும் முன் வைக்கமுடியும்.
இலங்கை தமிழ் மக்கள் நீண்டகாலமாக தேசம் அல்லது தேசிய இனமாக வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு தேசம் அல்லது தேசிய இனமாக வாழ்ந்து வருதல் அழிக்கப்படுவது தான் இனப்பிரச்சினையாகும். ஒரு தேசத்தை அல்லது தேசிய இனத்தைத் தாங்கும் தூண்களாக இருப்பவை நிலம், மொழி, பொருளாதாரம், கலாச்சாரம் என்பனவையே. இவற்றுடன் மக்கள் கூட்டத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். இவை அழிக்கப்படுவதுதான் இனப்பிரச்சினையாகும்.
ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அந்த இனத்தின் பூர்வீக நிலத்தை அழித்தால், அந்த இனம் பேசும் மொழியை அழித்தால், அந்த இனத்திற்கு வாழ்வாதாரமாக இருக்கின்ற பொருளாதாரத்தை அழித்தால் அந்த இனத்தை ஒன்றிணைக்கின்ற கலாச்சாரத்தை அழித்தால், அந்த இனம் அடையாளப்படுத்தும் மக்கள் கூட்டத்தை கொத்து கொத்தாக கொலை செய்தால் அந்த இனம் அழியும்.
இலங்கையின் வரலாற்று ரீதியாகவே இந்தத் தூண்கள் அழிக்கப்படுகின்றன. தமிழ் மக்களின் இதுவரை காலப் போராட்டம் என்பது இத்தூண்கள் அழிக்கப்படுவதைத் தடுக்கின்ற தற்காப்புப் போராட்டமே. இப்போராட்டம் அரசியல் வழி, ஆயுதவழி என அறுபது வருடங்களுக்கு மேலாக தொடர்கின்றது.
இங்கு எழும் அடுத்த கேள்வி இலங்கை அரசு ஏன் இந்த அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்பதே. அரசுருவாக்கத்தின்படி இலங்கைத் தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் உரியது. ஏனையவர்கள் வாழ்ந்து விட்டுப் போகலாம். அவ்வாறு வாழவிட்டதே சிங்கள மக்களின் பெருந்தன்மை. தமிழர்கள் ஒரு தேசமாக தம்மை அடையாளப்படுத்தக்கூடாது. மாறாக தமிழ் மக்கள் தேசமாக தம்மை அடையாளப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்;கின்றனர். இதற்காகவே தொடர்ச்சியாக இவ்வாறான அழிப்பு நடவடிக்கைகளில் சிறீலங்கா அரசு ஈடுபடுகின்றது.
எனவே இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது இவ்வழிப்பு நடவடிக்கைகளி;லிருந்து தமிழ் மக்களை பாதுகாப்பதாக அமைய வேண்டும்.
சி.அ.யோதிலிங்கம்-
நிமிர்வு பங்குனி 2017 இதழ்
Post a Comment