தமிழ்மக்கள் பேரவையின் உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த பிரகடனம்


தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில்,  உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த கருத்துப் பகிர்வு மற்றும் பிரகடன வெளியீடு கடந்த 05.09.2017 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. அரசியல் தலைவர்கள், துறைசார் நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டார்கள். கலந்துரையாடலின் இறுதியில் மக்களின் கருத்துகளின் முடிவாக வெளியிடப்பட்ட பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு:

இலங்கைத்தீவின் இனப்பிரச்சினைக்கான தீர்வானது, இந்த இனப்பிரச்சினையின் அடிப்படைக்காரணிகளை இனம்கண்டு நிரந்தரமாகத் தீர்ப்பதாக அமைய வேண்டும்.

வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தேசத்தில், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான, மதச் சார்பற்ற சமஷ்டித்தீர்வே இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையும். இதுவே இலங்கைத்தீவின் கௌரவமும் சமாதானமும் மதிக்கப்பட்டு சகல இனங்களும் சமத்துவத்துடனும் வாழக்கூடிய நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தவும் வல்லது.

இது தமிழர்களின் அடிப்படை அரசியல் அபிலாசை. இது பல தசாப்தங்களாக தேர்தல்களில் வழங்கிய ஆணைகள், திம்பு பிரகடனம் போன்ற சர்வதேச பிரகடனங்கள், பொங்குதமிழ், எழுகதமிழ் போன்ற மக்கள் எழுச்சி நிகழ்வுகள் மூலமும் மிகத் தெளிவாக பல தடவைகள் வெளிப்படுத்தப்பட்ட ஜனநாயக விருப்பும் ஆகும்.

இணைந்த வடக்கு கிழக்கில் தமிழ் தேசத்தின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு அதன் தனித்துவமான இறைமையின் அடிப்படையிலான சம~;டித்தீர்வு என்பது விட்டுக்கொடுக்கமுடியாத அடிப்படை அரசியல் கோரிக்கை. இலங்கையின் இனப்பிரச்சினைக்கான எந்த தீர்வும் இதன் அடிப்படையிலேயே அணுகப்படுவதே நேர்மையானதும் நீடித்து நிலைக்கக்கூடியதும் ஆகும்.

வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் (திட்டமிட்ட அரச குடியேற்றங்களால் குடியேற்றப்பட்டவர்கள் நீங்கலாக) இயற்கையாகவே வாழும் முஸ்லிம், சிங்கள மக்களும் இந்த சம~;டி அலகின் சகல உரிமைகளுக்கும் உரித்தானவர்கள். 

இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லிம் மக்கள்  தமக்கான அரசியல் அதிகார அலகை கோருவதற்கான உரிமைக்கு உரித்துடையவர்கள்.

இலங்கையின் உத்தேச அரசியலமைப்பானது, மலையகத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகள், அடிப்படைத் தேவைகள் என்பவற்றை திருப்திப்படுத்துவதாக இருக்கவேண்டும். இதற்கான குரலையும் தோழமை உறுதிப்பாட்டையும் நாம் என்றும் வழங்குவோம்.

கடந்த எழுபது ஆண்டுகளாக தமிழர்கள் மீது திட்டமிட்டவகையில்  இலங்கை அரசால் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலையில் இருந்து எமது இனத்தின் இருப்பைப் பாதுகாத்துக்கொள்ளவும் மேற்சொன்ன அரசியல் கோரிக்கைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

அத்தோடு, சர்வதேச நீதிமன்றம் அல்லது ஐ.நா. மேற்பார்வையிலான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் போன்ற சுயாதீன சர்வதேச குற்றவியல் நீதி விசாரணப்பொறிமுறை மூலம் இந்த இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல் மேற்கொள்ளப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.

எமது அரசியல் தீர்வுக்கான கோரிக்கையும் இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலும் விட்டுகொடுப்புக்கோ தம்மிடையே பதிலீட்டுக்கோ உரியவை அல்ல. இவை இரண்டும் பூர்த்தி செய்யப்படுவதன் மூலமே இயற்கை நீதியின் அடிப்படையில் தமிழர்களுக்கான நியாயம் கிடைக்கும்.

அரசியல் தீர்வு குறித்தும் பொறுப்புக் கூறல் குறித்தும் சர்வதேச அரங்குகளில் வாக்குறுதிகளை வழங்கி விட்டு,  அவற்றை பூர்த்தி செய்யாது, காலத்தை இழுத்தடித்து ஏமாற்றுவதே, இலங்கை அரசு காலம் காலமாக மேற்கொண்டுவரும் நடைமுறையாகும்.

சர்வதேச நெருக்குவாரங்களில் இருந்து தம்மை பாதுகாப்பதற்கான ஒரு யுக்தியாகவே இந்த பொய் வாக்குறுதிகளை வழங்குவதனை இலங்கை அரசாங்கங்கள் தம் வழக்கமாக கொண்டுள்ளன.

அந்த வகையில் இந்த அரசாங்கமும் முன்னைய அரசாங்கங்களிலிருந்து எதுவிதத்திலும் தம்மை வேறுபடுத்த வில்லை. 

இந்த அரசாங்கமானது, 2015, 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் ஐ.நா மனித உரிமை பேரவையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் எதனையும், நேர்மையான முறையில், ஐ.நா பேரவையில் வலியுறுத்தப்பட்டது  போன்று, பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களை உள்ளீர்த்து பூர்த்தி செய்யவில்லை. மாறாக, சர்வதேசத்தை ஏமாற்றும் பெயரளவிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவதையே முற்கொண்டு செல்கிறது.

உலகின் உயர்சபையாகிய ஐ.நாவின் மனித உரிமை பேரவையினதும் மற்றும் ஜனநாயக செயன்முறைகளில் நம்பிக்கை  கொண்டுள்ள நாடுகளினதும் கௌரவத்தை மதிப்பிழக்கச்செய்யும் வகையிலும் அவற்றிற்கு சவால்விடும் வகையிலும், ஐ.நா மனித உரிமை பேரவையில் குறிப்பிடப்பட்ட  சர்வதேச நீதிபதிகள், பயங்கரவாத தடைசட்ட நீக்கம் போன்றவற்றை அப்பட்டமாகவே மறுதலித்து    தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் அதிகார உயர்பீடத்தினரான ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை ஆகியோர் வெளிப்படையாகவும் உத்தியோக பூர்வமாகவும் கருத்துகள் வெளியிட்டுவருவது குறித்து சர்வதேச சக்திகள் தமது தீவிரமான கரிசனையை செலுத்த வேண்டும்.

பொறுப்புக்கூறலில் மட்டுமல்லாது, தமிழ் மக்களின் அரசியல் விருப்பை, புதிய அரசியலமைப்புக்கான மக்கள் கலந்தாய்வுக்குழுவுக்கான சமர்ப்பணம் உட்பட பல தடவைகளில் மக்கள் வெளிப்படுத்தியிருந்த போதிலும் அவற்றையெல்லாம் ஒரேயடியாக புறந்தள்ளுவதாகவே ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை மற்றும் புதிய அரசியலமைப்புக்கான மக்கள் கலந்தாய்வுக்குழு தலைவர் மற்றும் உத்தேச அரசியலமைப்பை வரையும் பிரமுகர்களின் கருத்துக்கள் இருக்கின்றன.

அரசாங்க உயர்பீடத்தின் உத்தியோகபூர்வ மறுதலிப்புகள், இந்த அரசாங்கத்துக்கும் தமிழர்களின் அரசியற் பிரச்சினையை தீர்ப்பது குறித்தோ அல்லது நேர்மையான பொறுப்புக்கூறல் குறித்தோ  உண்மையான அரசியல் விருப்பு இல்லை என்பதை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துவதாலும் நடைமுறை அனுபவத்தில் இலங்கை அரசின் முன்னெடுப்புகள் மீது தமிழர்கள் நம்பிக்கையை இழந்திருப்பதாலும், சர்வதேச நாடுகள் இந்த விடயத்தில் தமது நேரடித்தலையீட்டை தாமதமின்றி மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை, மேலே பிரகடனப்படுத்தப்பட்ட மக்களது விருப்புகளின் அடிப்படையில்  வழங்க வழிவகை செய்யவேண்டும்.     

நிமிர்வு புரட்டாதி 2017 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.