முகிலன் எங்கே?






ஈழத்தில் போர் நடைபெற்ற காலங்களிலும், அதற்குப் பின்பும் கூட ஏராளமான தமிழர்கள் வெள்ளை வான்கள் மூலமாகக் கடத்தப்பட்டு காணாமல் போய் இருக்கிறார்கள். சாலையோரங்களில் நடந்து செல்லும் பொழுது, வீட்டில் இருக்கும் பொழுது, கோயிலுக்குச் செல்லும் பொழுது என எந்த நேரம் வேண்டுமானாலும் கடத்தப்படலாம், காணாமல் போகலாம் என்ற சூழ்நிலையே ஈழத்திலும், கொழும்பிலும் நிலவியது. சிறீலங்கா அரசாங்கமே இவ்வாறு கடத்திச் சென்று கொன்று விடுவது அல்லது ஏதேனும் சிறைகளில் சட்டவிரோதமாக அடைத்து வைப்பது போன்றவற்றைச் செய்து வந்துள்ளது.

காஷ்மீரிலும் இந்தியப் படைகள் இது போல பல காஷ்மீரிகளை கடத்திச் சென்றுள்ளன. காணாமல் போன அவர்களின் நிலை குறித்து எதுவும் தெரியாது. இது குறித்து சர்வதேச மனித உரிமை அமைப்பு இந்தியா மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. உலகெங்கிலும் போர்ச் சூழல் உள்ள பகுதிகளில் காணாமல் போகிறவர்களின் எண்ணிக்கை அதிகம். இதில் அந்தப் பகுதியில் உள்ள அரசாங்கங்களின் பங்கு முக்கியமாக உள்ளது.

இவ்வாறான நிலைமை தமிகத்திலும் வரும் என எதிர்பார்க்கவில்லை. சூழலியல் போராளி முகிலன் காணாமல் போய் இருக்கிறார். அவரது நிலை என்ன என்பது தெரியவில்லை.

தமிழகத்தின் அதிமுக அரசு பாஜகவின் சொல்படி இயங்கும் அடிமை அரசாங்கம். பாஜக அரசாங்கம் நாக்பூர் திட்டங்களையும், கார்ப்பரேட் நிறுவனங்களின் திட்டங்களையும் செயல்படுத்தும் அரசாங்கம் தானே தவிர சாமானிய மக்களின் அரசாங்கம் அல்ல. இந்த அரசாங்கங்களின் உதவி இல்லாமல் முகிலன் காணாமல் போய் இருக்க முடியாது என்பது தான் எல்லோரின் எண்ணமாக உள்ளது.

தமிழகத்தில் எத்தனை செய்தி ஊடகங்கள் உள்ளன என்று எண்ன முடியாத அளவுக்கு ஊடகங்கள் வளர்ச்சி பெற்று விட்டன. ஆனால் தமிழகத்தில் இன்று வரை முகிலன் காணாமல் போனது ஒரு பெரிய பிரச்சனையாகத் தெரியவில்லை. தேர்தல் கூட்டணி, போர் எனச் சுவாரசியமான செய்திகளைச் சுற்றித் திரியும் ஊடகங்களுக்கு, ஒரு சூழலியல் போராளி காணாமல் போனது பெரிய பிரச்சனையா என்ன?

கூட்டணிப் பேர அரசியல் செய்து வரும் முக்கிய அரசியல் கட்சிகளுக்கும் கூட இதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மணல் கொள்ளைகளும், கனிமவளச் சுரண்டலும் தொடரத்தான் போகின்றன. அதனால் முகிலன் போன்றவர்கள் காணாமல் போவது அடுத்து ஆட்சிக்கு வரும் கட்சிக்கு நல்லது தான். அதனால் அவர்களும் அதனைப் பற்றி அதிகம் பேசுவதில்லை.

தமிழகத்திலும் இலங்கை போல வெள்ளை வான்களின் கலாச்சாரம் வந்து விடுமோ என்ற அச்சமே ஏற்படுகிறது. அதிக போராட்டங்கள் நடைபெறும் தமிழகத்தில், போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர, சமூகச் செயற்பாட்டாளர்கள், வெள்ளை வான் கலாச்சாரம் மூலமாக காணாமல் போகும் அபாயகரமான சூழலை தமிழகம் எதிர்கொள்ளுமோ என்ற அச்சத்தையே முகிலனின் நிலை நமக்கு ஏற்படுத்துகிறது.

ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் கேட்காத சூழலில் ஒரு சிலர் மட்டுமே தன்னிச்சையாக சமூக வலைத்தளங்களில் கையறு நிலையுடன் கேட்க வேண்டியுள்ளது - முகிலன் எங்கே ?


தமிழ் சசி-
நிமிர்வு பங்குனி 2019 இதழ் 


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.