உள்ளூராட்சிக்கென பகிரப்பட்ட அதிகாரங்களை நிராகரிக்காதீர்கள்



கடந்த 10.12.2020 அன்று வலிகாமம் பிரதேச சபைக்கு முன் அரச ஆதரவு அரசியல்வாதி ஒருவரின் ஏற்பாட்டில் சிறு குழுவினரால்  ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.   ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மக்களுக்கு இதன் பின்னால் உள்ள உண்மை நிலையை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் தெளிவுபடுத்தினர். அதையடுத்து அந்த மக்கள்  அமைதியாக கலைந்து சென்றனர். 


இது மத்திய அரசுக்கும் - உள்ளூராட்சி அரசுக்கும் இடையிலான அதிகாரப் பிரச்சினையே தவிர பிரதேசசபைக்கும் - மக்களுக்குமிடையிலான பிரச்சினை கிடையாது. பிரதேச சபையிடம் உரிய அனுமதியை பெற்று வீதியை அமைத்தால் நானோ உறுப்பினர்களோ இதற்கு தடையாக இருக்க மாட்டோம்.  அபிவிருத்திகளை நாட்டின் அதிகாரப்பகிர்வு வழிவகைகளில் ஒன்றாக அமைகின்ற உள்ளூராட்சி மன்றங்களின் சட்டங்களையும் ஒழுங்குகளையும் மீறாது நடைமுறைப்படுத்துங்கள் என்றே கேட்கின்றோம். உள்ளூராட்சி மன்றங்களைப் புறந்தள்ளி அரசியல் நோக்கங்களுக்காக மத்திய அரசாங்கத்தின் பொறிமுறை செயற்படக் கூடாது. உள்ளூராட்சிக்கென பகிரப்பட்ட அதிகாரங்களை நிராகரிக்காதீர்கள் என அங்கிருந்த மக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் தெரிவித்தார் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ். 

உள்ளூராட்சிக்கென பகிரப்பட்ட அதிகாரங்களை யாராலும் நிராகரிக்க முடியாது. அதிகாரப் பகிர்வை அப்பட்டமாக மத்திய அரசு  மீறுவதற்கெதிராக அவர் குரல் கொடுத்திருக்கிறார்.  நான் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்  இல்லை. இருந்தாலும் எங்களுடைய அதிகாரங்கள் பறிக்கப்படுவதற்கு எதிராக அவர் குரல் கொடுத்திருக்கிறார் என்பதால் தான் இங்கே வந்திருக்கிறேன் என தெரிவித்தார் முன்னாள் மாகாணசபை உறுப்பினரான எம்.கே சிவாஜிலிங்கம்.  

இதுவரை நடந்தவை என்ன? சுருக்கம் 

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அச்செழு அம்மன் கோவில் வீதியைச் சீரமைக்கும் பணியை ஆரம்பித்து அதற்கான திட்டப் பெயர்ப்பலகையும் நாட்டப்பட்டது. வலி.கிழக்குப் பிரதேச சபையின் அனுமதி பெறப்படாது நாட்டப்பட்டது என்பதால் தவிசாளர் தியாராஜா நிரோஷ் அதனை அகற்றுவதற்குப் பணித்திருந்தார். இதற்கமைய பெயர்ப் பலகை அகற்றப்பட்டது.

இந்நிலையில் தவிசாளரிடம் இரு தடவைகள் அச்சுவேலிப் பொலிஸார் வாக்குமூலத்தை பதிவு செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து அரச சொத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷைக் கைது செய்ய கடந்த ஏழாம் திகதி அச்சுவேலிப் பொலிஸார் சபையின் தலைமையகத்துக்குச் சென்றிருந்தனர். எனினும், காலை முதல் மாலை வரை தவிசாளர் சபைக்குச் சமூகமளிக்காமையால் பொலிஸார் திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில் தவிசாளர் நிரோஷை அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்யவதைத் தடுக்கும் விண்ணப்பம் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் அவரது சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து நீதிமன்றம் கடந்த 9 ஆம் திகதி முன்பிணை மனுவை ஆராய்ந்து முன்பிணை அளித்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து கடந்த 10 ஆம் திகதி வெள்ள நிவாரணம் வழங்குவதாக கூறி 28 பேரை வானில் ஏற்றி வந்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலைமையலுவலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டமும்  இடம்பெற்றது. 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.