இரட்டைப் பிரஜாவுரிமை உடையோரும் தேர்தலில் போட்டியிடலாம்!- யாருக்கு என்ன நன்மை?

 


இது பசில் ராஜபக்சவை உள்ளுக்குள் கொண்டு வருவதற்கானது என்பது  எல்லாருக்கும் தெரியும். இதற்கு அவரின் சகோதரன் கோத்தபாய சொன்ன காரணம் என்னவென்றால், "இந்த இரட்டைப் பிரஜாவுரிமை எங்கள் குடும்பத்துக்கு எதிராக கொண்டு வரப்பட்டது.  நாங்கள் இதனை முறியடிக்க வேண்டும். அப்படி செய்தால் தான் நான் வெற்றி பெற்றனான் என்பதனை உறுதிப்படுத்தலாம்."  என சொல்லி தான் அந்த சரத்தை எதிர்த்த தன்னுடைய கட்சியை சேர்ந்தவர்களை அவர் சரிப்படுத்தியிருக்கிறார்.  இது ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணமில்லை. 

இரட்டைப் பிரஜாவுரிமை சம்பந்தப்பட்ட விடயம்  பசிலைக் கொண்டு வரத் தான் என்பதனை தெரிந்தும் கூட எங்கள் எதிர்க் கட்சிகள் என்ன சொன்னார்கள்?  புலம்பெயர்ந்த தமிழர்களை அவர்கள் நாட்டுக்குள் தேர்தலில் ஈடுபடுத்தப் போகிறார்கள் என்று  சொன்னார்கள். அதாவது புலம்பெயர் தமிழர்கள் தேர்தலில் ஈடுபடுவதற்கு இருக்கும் தடை அகற்றப்படுகிறது. 

புலம்பெயர்ந்த தமிழர்கள் என இவர்கள் யாரை சொல்ல வருகிறார்கள்? புலம்பெயர்ந்த தமிழர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள் தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சியை இன்னும்  வைத்திருப்பவர்கள். தமிழ் மக்களின் போராட்ட நெருப்பை அணைய விடாமல் வைத்திருப்பவர்கள்.  அவர்களை கொண்டு வந்து இறக்கினால் நாட்டைக் குழப்பிவிடுவார்கள். இந்த இடத்தில் கூட அவர்கள் இனவாதத்தை தான் கையில் எடுக்கிறார்கள். இரட்டைப் பிரஜாவுரிமை விவகாரம் பசில் ராஜபக்சவை உள்ளுக்குள் கொண்டு வருவதற்கென்று நன்றாக தெரிந்திருந்தும்  அதற்கெதிரான எதிர்ப்பை மக்கள் மயப்படுத்த அவர்கள் எடுத்துக் கொண்ட விடயம் இனவாதம். 


ஆனால், தமிழ்மக்கள் இந்த விடயத்தில் தங்கள் நோக்கு நிலையில் இருந்து சில விடயங்களை கவனிக்க வேண்டும். தமிழ்மக்களில் நான்கில் ஒரு பகுதி புலம்பெயர்ந்து விட்டது.  அதில் ஆயுதப் போராட்டத்தை ஏற்றவர்களும் இருக்கிறார்கள். ஏற்காதவர்களும் இருக்கிறார்கள்.  இவர்களெல்லாம் புலம்பெயர்ந்து போய் அங்கிருக்கும் ஜனநாயக சூழலுக்குள் ஒரு புதிய அனுபவ தொகுப்பை பெற்றிருக்கிறார்கள். குறிப்பாக ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டு  நாட்டை விட்டு வெளியேறிய பலர்   அங்கிருக்கும் ஜனநாயக சூழலுக்குள் பல விடயங்களை கற்றுத் தேர்ந்து முதிர்ச்சியானவர்களாக வந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஆயுதப் போராட்ட அனுபவத்தையும் கொண்ட   ஜனநாயக பண்புகள் நிறைந்த நாட்டில் வாழ்ந்த அனுபவங்களையும் கொண்ட இந்த இரண்டினதும் தொகுக்கப்பட்ட அனுபவங்களையும்  கொண்ட ஆளுமைகள் தமிழ் அரசியலில் ஈடுபட வேண்டும். 

இன்று தமிழ் மக்களுக்கு தலைமைத்துவப் பற்றாக்குறை உள்ளது. ஆயுதப் போராட்டம் ஒரு பக்கம் தலைமைகளை இல்லாமல் செய்து விட்டது.   இன்னொரு பக்கம் ஆயுதப் போராட்டத்தால்  தலைமைகள் அழிக்கப்பட்டு விட்டது.  ஒரு தொகுதி தலைமைகள் புலம்பெயர்ந்து விட்டது.  இதனால் புலம்பெயர்ந்த தமிழர்கள் அங்கிருந்து இங்கு வருவதில், ஒரு புது இரத்தம் பாய்ச்சப்பட முடியும் என்று சொன்னால் நாங்கள் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். புலம்பெயர்ந்த தமிழர்கள் அங்கிருந்து பரசூட் மூலம் இறக்கப்படக் கூடாது. அவர்கள் நாட்டுக்குள் வந்திருந்து கீழிருந்து மேல் நோக்கி தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்பி தங்களையும் தலைவர்களாக கட்டியெழுப்ப வேண்டும். அவர்கள் கோடை விடுமுறைக்கு வந்து சிலநாள் இங்கே நின்றுவிட்டுப் போகாமல் ஒரு குறிப்பிட்ட ஆண்டு காலம் இங்கே வந்து நின்று  தங்களுடைய உலகளாவிய அனுபவங்களையும் இந்த மக்களுக்குப் போதித்து ஆயுதப் போராட்டத்தில் இருந்து தொகுக்கப்பட்ட  பாடங்களின் அடிப்படையில்  அவர்கள் தலைவர்களை பண்படுத்தி உருவாக்க வேண்டும். எங்களிடம் இப்போது பொருத்தமான தலைவர்கள் இல்லை. 


ஒரு மாற்று அணி தனக்குள் கூட்டுக்குள் போக முடியவில்லை என்றாலோ, கட்சிகளை ஒருங்கிணைப்பதில் கூட மகத்தான தலைமையை கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலோ, ஒரு வெளிவிவகார கொள்கையை தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்து  ஒரு பலமான கட்சிகளும் பிரதிநிதிகளும் அடங்கிய, புத்தியீவிகளு ஏனைய தரப்புக்களும் அடங்கிய ஒரு பலமான கட்டமைப்பை உருவாக்க முடியவில்லை என்றாலோ  அதற்கெல்லாம் காரணம் எங்களிடம் தரிசனம் மிக்க பெருந்தலைவர்கள் இல்லை என்பது தான். தமிழ்மக்கள் மத்தியில் தலைமைத்துவத்துக்கு பெரும் பற்றாக்குறை உள்ளது. 

இறந்தகாலத்தில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு நிகழ்காலத்தை தீர்க்க தரிசனமாக திட்டமிடக் கூடிய தலைமைகள்  எங்களுக்கு வேண்டும். எனவே இது விடயத்தில் புலம்பெயர்ந்த தமிழ் தரப்பில் இருக்கக் கூடிய ஒரு பகுதியினர் எங்களுக்கு உதவ முடியும். புலம்பெயர்ந்த பலத்தை அதன் சக்தியை யூதர்கள் எப்படி ஒன்று திரட்டினார்கள் என்பதனை நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அங்கே புலம்பெயர்ந்த ஆளுமை மிக்கவர்கள் எல்லாம் தேச உருவாக்கத்தில் பெரும் பங்களிப்பை செய்தார்கள். அதே போல் இங்கேயும் ஒரு தேச உருவாக்கத்தில், ஒரு தேசமாக எழுவதில் புலம்பெயர்ந்த தமிழ் ஆளுமைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். 

(இந்த ஒளிப்பதிவு ஒருவாரத்துக்கு முன்பு பதிவு செய்யப்பட்டது)

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.