ஓர் இனத்தை அழிக்க சீனா சொல்லித்தரும் பாடம்


சீன அரசின் இரகசியமான உயர்மட்ட ஆய்விலிருந்து சிஞ்ஜியாங்கில் உள்ள உய்குர்கள் மற்றும் பிற இன சிறுபான்மையினரை நூறாயிரக்கணக்கில் வீட்டிலிருந்து வெகு தொலைவில் உள்ள புதிய வேலைகளுக்கு அனுப்பும் சீனாவின் கொள்கை அவர்களின் இனச்செறிவைக் குறைக்க வழிவகுக்கிறது. 

உயர்மட்ட அதிகாரிகளின் பார்வைக்காக தயாரிக்கப்பட்ட இந்த ஆய்வறிக்கை தவறுதலாக வலைத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டு விட்டது. இந்த ஆய்வறிக்கையும், சீனா முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் சேகரிக்கப்பட்ட தகவல்களும், சீனாவின் பிரச்சார அறிக்கைகளும் BBC ஆல் வெளியிடப்பட்ட கட்டுரைக்கு ஆதாரங்களாக உள்ளன. 

 சீன அரசாங்கமோ இப்பிராந்தியத்தின் இனச்செறிவை மாற்ற முயற்சிப்பதாக சொல்லப்படும் குற்றச்சாட்டை மறுக்கிறது. இடமாற்றங்கள் வருமானத்தை உயர்த்தவும், நீண்டகால கிராமப்புற வேலையின்மை மற்றும் வறுமையை போக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. ஆனால் BBCஆல் திரட்டப்பட்ட ஆதாரங்கள் அரசின் இக்கொள்கை, சமீபத்திய ஆண்டுகளில் சிஞ்ஜியாங் முழுவதும் கட்டப்பட்ட “மறு கல்வி முகாம்கள்” போன்று மக்களை வற்புறுத்தலுக்கு உள்ளாக்கும் தன்மையுள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றன. 

மேலும் அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் சிந்தனைகளை மாற்றி சீனருடன் ஒன்றாக கலக்க வைக்கும் நோக்கத்துடன் இக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டி நிற்கின்றன. இவ்வாறு வற்புறுத்தி அணிதிரட்டப்பட்ட மக்களைக் கொண்டு செய்யப்பட்ட பொருட்கள் எந்த அளவுக்கு உலக சந்தையில் கலந்துள்ளது என்பது பலரதும் அக்கறைக்கு உள்ளாகியுள்ளது. உய்குர்களின் உழைப்புக்கும் மேற்கு நாட்டு நிறுவனங்கள் இரண்டுக்கும் உள்ள தொடர்புகள் தொடர்பாக BBC ஆராய்ந்து வருகிறது. 

 சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் ஊடகத்தில் ஒளிபரப்பப்பட்ட ஒரு காணொலி அறிக்கை, 4,000 கி.மீ தூரத்தில் உள்ள அன்ஹுய் (Anhui) மாகாணத்தில் ஒரு கிராமத்து மக்களின் அன்றாட விவசாய வாழ்க்கையை காட்டுகின்றது. பின்னர் கிராம மையத்தில் அதிகாரிகள் குழுவொன்று ஒரு சிவப்பு விளம்பரப் பதாகையின் கீழ் அமர்ந்திருப்பதைக் காட்டுகிறது. இரண்டு முழு நாட்கள் அவர்கள் அவ்வாறு காத்திருந்த போதும் கிராமத்திலிருந்து ஒரு நபர் கூட அங்கு பதிவு செய்ய முன்வரவில்லை. எனவே அதிகாரிகள் வீடு வீடாக செல்லத் தொடங்குகிறார்கள். 

 அடுத்து வரும் காட்சிகள் ஜின்ஜியாங்கில் உள்ள உய்குர்கள், கசாக் மற்றும் பிற சிறுபான்மையினரை தொழிற்சாலை மற்றும் சிறுதொலில் வேலைகளுக்கு மாற்றுவதற்கான சீனாவின் பாரிய நடவடிக்கையை காட்டும் முக்கியமான காட்சிகள். இது அவர்களின் வீடுகளிலிருந்து கணிசமான தூரத்தில் உள்ள இடங்களுக்கு அவர்களை மாற்றுவதை பெரும்பாலும் உள்ளடக்கியுள்ளது. சீனாவின் இக்கொள்கை தீவிரமடையத் தொடங்கிய 2017 இல் ஒளிபரப்பப்பட்டிருந்தாலும் இந்தக் காணொலி சர்வதேச செய்தி அறிக்கையில் இதுவரை இடம்பெறவில்லை. அ

திகாரிகள் ஒரு தந்தையிடம் பேசுகிறார்கள். அவர் தனது மகள் புசாயனாப்பை தூர இடத்துக்கு அனுப்பத் தயங்குகிறார். எங்கள் வாழ்க்கையை இங்கே நடத்த முடியும். எமது இயல்பான வாழ்க்கையை வாழ்வோம்.” என்று கெஞ்சுகிறார். அவர்கள் நேரடியாக 19 வயது புசாயனாப்பிடம் பேசுகிறார்கள். அவள் அங்கே தொடர்ந்து தங்கினால் விரைவில் திருமணம் செய்து கொள்வாள். அதன்பின் ஒரு போதும் வெளியேற முடியாது என்று அவளிடம் சொல்கிறார்கள். அவளை சிந்திக்குமாறு கேட்கிறார்கள். அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசு - தொலைக்காட்சி பத்திரிகையாளர்களின் தீவிர அழுத்தத்தின் மத்தியிலும் அவள் தலையை அசைத்து, நான் போகமாட்டேன் என்று பதிலளித்தாள். ஆனாலும் அழுத்தம் தொடர்கிறது. இறுதியில் அழுதவாறே மற்றவர்கள் சென்றால் நான் செல்வேன், என்று கூறுகிறாள். இறுதியில் புசாயனாப் போன்று அணிதிரட்டப்பட்ட ஆட்கள் தாய்மார்களிடமிருந்து கண்ணீருடன் விடைபெறுவதாக காட்டி காணொலி முடிகிறது. 

அவர்கள் தங்கள் குடும்பத்தையும் கலாச்சாரத்தையும் விட்டு வெளியேறுகிறார்கள். மனித உரிமைகள் மற்றும் நவீன அடிமைத்துவம் என்பவற்றில் நிபுணரான பேராசிரியர் லாரா மர்பி (Laura Murphy) இங்கிலாந்தின் ஷெஃபீல்ட் ஹலாம் (Sheffield Hallam) பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். இவர் 2004 மற்றும் 2005 இல் சின்ஜியாங்கில் வசித்து வந்தவர். அதன் பின்னர் பலதடவைகள் அங்கு சென்று வந்துள்ளார்.
இந்த திட்டங்களில் மக்கள் தன்னார்வத்துடன் கலந்து வருகிறார்கள் என்று சீன அரசாங்கம் தொடர்ந்து கூறுகிறது. ஆனால் இது ஒரு வற்புறுத்தல் முறை என்பதையும் மக்கள் அதனை மறுதிலிக்க அனுமதிக்கப் படுவதில்லை என்பதை இந்தக் காணொலி முற்றிலும் வெளிப்படுத்துகிறது. என்று அவர் சொல்கிறார். மக்களை வறுமையிலிருந்து உயர்த்துவது தான் நோக்கம் என்று விபரிக்கப்பட்டாலும், மக்களின் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றுவதற்கும், குடும்பங்களை பிரிப்பதற்கும், மக்களைக் கலைப்பதற்கும், அவர்களின் மொழியை மாற்றுவதற்கும் ஒரு உந்துதல் இதன் பின்னால் இருக்கிறது. 

அவர்களின் கலாச்சாரம், குடும்ப கட்டமைப்புகளை சிதைவதனால் வறுமை குறைவதற்கு மாறாக அதிகரிக்கவே வாய்ப்புக்கள் உள்ளன. என்று அவர் கூறிகிறார். 2013 ஆம் ஆண்டில் பெய்ஜிங்கிலும், 2014 இல் குன்மிங் நகரத்திலும் பாதசாரிகள் மற்றும் பயணிகள் மீதான இரண்டு மிருகத்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இது உய்குர் இஸ்லாமியவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளால் நடத்தப்பட்டதாக சீனா குற்றம் சாட்டியது. 

அன்றிலிருந்து சின்ஜியாங்கில் சீனாவின் அணுகுமுறையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் காணலாம். அந்த மாற்றத்தில் முக்கியமானவை இந்த “மறு கல்வி முகாம்கள்” மற்றும் “வேலைவாய்ப்பு இடமாற்றங்கள்”. இவற்றினூடாக பழைய கலாச்சாரத்துக்கும் இஸ்லாமிய நம்பிக்கைக்கும் உள்ள விசுவாசத்திற்கு பதிலீடாக நவீன பொருள்முதல்வாதத்துக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் உய்குர்களை மாற்றுவது. சீனாவின் பெரும்பான்மையான ஹான் கலாச்சாரத்திற்குள் உய்குர்களை ஒருங்கிணைப்பதற்கான இந்த குறிக்கோள், மேலே குறிப்பிட்ட சீன ஆய்வறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தொழிலாளர் இடமாற்றங்கள் உய்குர் சிறுபான்மையினர் மீது செல்வாக்கு செலுத்துவதற்கும், அவர்களை சீனர்களுடன் ஒருங்கிணைப்பதற்கும் ஒரு முக்கியமான முறையாகும் என்று சொல்கிறது. 

இந்நடவடிக்கை அவர்களின் சிந்தனையில் மாற்றத்தை கொண்டு வருவதாகவும் முடிவு செய்கிறது. உய்குர் மக்களை அவர்களின் இடங்களிலிருந்து அகற்றி அப்பிராந்தியத்தில் அல்லது பிற சீன மாகாணங்களில் உள்ள வேறு இடங்களுக்கு மாற்றம் செய்வது, உய்குர் மக்கள் அடர்த்தியைக் குறைக்கிறது என்று அது கூறுகிறது. இந்த அறிக்கை மே 2018 இல் சின்ஜியாங்கின் ஹோடன் (Hotan) பிரிவில் நடத்தப்பட்ட கள ஆய்வுகளின் அடிப்படையில் தியான்ஜினில் (Tianjin) உள்ள நங்காய் (Nankai) பல்கலைக்கழக கல்வியாளர் குழுவால் எழுதப்பட்டது. பல்கலைக்கழகத்தால் தவறுதலாக வலைத்தளத்தில் வெளிவிடப்பட்ட இவ்வறிக்கையை அங்கிருந்து நீக்கப்பட முன்னர் வெளிநாட்டிலிருந்த உய்கர் ஆராய்ச்சியாளர் ஒருவர் கண்டுபிடித்து தரவிறக்கம் செய்து விட்டார். 

 வாஷிங்டனில் உள்ள கம்யூனிசத்துக்கு பலியானவர்களின் நினைவு அறக்கட்டளையின் அறிஞர் கலாநிதி அட்ரியன் சென்ஸ் (Dr. Adrian Zenz), இந்த அறிக்கையின் ஆங்கில மொழிபெயர்ப்பை உள்ளடக்கிய தனது சொந்த பகுப்பாய்வை எழுதியுள்ளார். இது முன்னெப்போதும் இல்லாத வகையில், சிஞ்சியாங்கின் அரசாங்கத்துடன் உயர்மட்ட தொடர்புகளுள்ள முன்னணி கல்வியாளர்கள் மற்றும் முன்னாள் அரசாங்க அதிகாரிகளால் எழுதப்பட்ட நம்பகத்தனமான அறிக்கை என்று அவர் BBC பேட்டியில் கூறினார். அவர்களது பூர்வீக பிரதேசத்தில் அதிகப்படியான மக்கள் தொகைச் செறிவைக் குறைப்பதற்காக, தொழிலாளர் இடமாற்றத்தை ஒரு வழியாகப் பயன்படுத்துவது என்பதை ஒத்துக்கொள்வது என்பது இந்த அறிக்கையின் மிகவும் அதிர்ச்சியூட்டும் ஒப்புதல். என்று தெரிவிக்கிறார். அவரது பகுப்பாய்வில், அமெரிக்க ஹோலோகாஸ்ட் நினைவு அருங்காட்சியக முன்னாள் மூத்த ஆலோசகரான எரின் ஃபாரெல் ரோசன்பெர்க்கின் (Erin Farrell Rosenberg) சட்டபூர்வமான கருத்தும் உள்ளது. 

பலவந்தமான இடமாற்றம் மற்றும் துன்புறுத்தலின் ஆகிய மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு நங்காய் அறிக்கை நம்பகமான ஆதாரங்களை வழங்குகிறது என்பது அக்கருத்தாகும். சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட ஒரு எழுத்துப்பூர்வ அறிக்கையில், இந்த அறிக்கை ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. அதன் பெரும்பாலான உள்ளடக்கங்கள் உண்மை இல்லை என்று கூறியுள்ளது. சின்ஜியாங்கைப் பற்றி தெரிவிக்கும் போது ஊடகவியலாளர்கள் சீன அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல்களை அடிப்படையாகப் பயன்படுத்துவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். என்று தெரிவித்துள்ளது. 

 தன்னார்வ ஈடுபாட்டுக்கு உத்தரவாதம் மற்றும் தொழிற்சாலைகள் தொழிலாளர்களை சுதந்திரமாக வெளியே போய்வர அனுமதிக்கின்றமை என்பவை வறுமையை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சியை உத்தரவாதப்படுத்தும் என்று நங்காய் அறிக்கை ஆசிரியர்கள் உயர்வாக எழுதியுள்ளார்கள். ஆனால் அந்தக் கூற்றுக்கள் நடைமுறையில் செயல்படும் விதம் குறித்து அவர்கள் வழங்கும் விவரங்கள் அந்தக் கூற்றுகளோடு முரண்படுகின்றன. தன்னார்வ ஈடுபாட்டு மாயை எத்தனை தொழிலாளர்களை அணிதிரட்ட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு இலக்குகள் வழங்கப்படுகின்றன. இலக்குகளை பூர்த்தி செய்ய அழுத்தம் உள்ளது. 

ஆட்சேர்ப்பு நிலையங்கள் ஒவ்வொரு கிராமத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 19 வயதான புசாயனாப்பின் விஷயத்தைப் போலவே கூட்டாக அணிதிரட்டவும் மற்றும் வீடுகளுக்கு சென்று ஆட்சேர்க்கவும் அதிகாரிகள் பணிபுரிந்தனர். ஹோடன் (Hotan) பிரிவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நேரத்தில் ஏற்கனவே 250,000 தொழிலாளர்கள் (அதன் மொத்த உழைக்கும் வயது மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கு) ஏற்றுமதி செய்யப்பட்டபின்னும் இலக்குகள் எட்டப்படவில்லை. ஒவ்வொரு கட்டத்திலும் கட்டுப்பாடுகள் உள்ளதற்கான அறிகுறிகள் உள்ளன. 

அணிதிரட்டப்பட்ட அனைவரும் அரசியல் சிந்தனைக் கல்வி கட்டாயமாக்கப்படுகிறது. பின்னர் குழுக்களாக தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். அவர்களை பாதுகாக்கவும் நிர்வ‍கிக்கவும் அவர்களுக்கு தலைவராக ஒரு அரசியல் அதிகாரி உடன் வருவார். தங்கள் நிலங்களை அல்லது கால்நடைகளை விட்டுவிட்டு வெளியேற விரும்பாத விவசாயிகள், அவர்கள் இல்லாத நேரத்தில் அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பை ஒரு மையப்படுத்தப்பட்ட அரசாங்கத் திட்டத்திற்கு மாற்ற ஊக்குவிக்கப்படுகிறார்கள். அவர்கள் புதிய தொழிற்சாலைகளுக்கு வந்தவுடன், அதிகாரிகளுடன் ஒன்றாக வதிவதற்கும் மையப்படுத்தப்பட்ட நிர்வாகத்தின் கீழ் வைக்கப்படுகிறார்கள்.
அதேவேளை சீனாவில் உள்ள இனவாதம் இந்த திட்டத்தை செயற்படுத்துவதற்குத் தடையாக இருப்பதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. சீனாவின் கிழக்கு பகுதியிலிருக்கும் பிற மாகாணங்களுக்கு பெருமளவான உய்குர்களின் வருகையை எதிர்க்கும் அங்குள்ள உள்ளூர் பொலிசார் அவர்களை திருப்பி அனுப்புவதும் நடக்கிறது. அத்துடன் சிஞ்ஜியாங்கில் சீனாவின் கொள்கைகள் மிகவும் கடுமையக இருப்பதாகவும் அறிக்கையில் சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, மறு கல்வி முகாம்களில் வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை சிஞ்ஜியாங்கில் தீவிரவாதத்துடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட மிக அதிகமாக இருப்பதாகக் கூறுகிறது. 

“முழு உய்குர் மக்களையும் கலகக்காரர்களாக கருதக்கூடாது என்று அது கூறுகிறது. சுதந்திரமாக போய்வரும் உரிமை நாடகம் ஹுவாபு (Huafu) ஆடை நிறுவனம் சீனாவின் கிழக்கு மாகாணமான அன்ஹுய் (Anhui) மாகாணத்தில் உள்ள ஹூவாய்பீ (Huaibei) நகர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலைக்குதான் புசாயனாப் அனுப்பப்பட்டார். இத்தொழிற்சாலையை BBC பார்வையிடப் போன போது ஐந்து மாடி உய்குர் தங்குமிடக் கட்டடம் பெரும்பாலும் வெறுமையாக காணப்பட்டது. ஒரு சாளரத்தில் மட்டும் ஒரு சோடி காலணிகளைக் காணக்கூடியதாக இருந்தது. வாயில் பாதுகாப்புக் காவலர் உய்குர் தொழிலாளர்கள் நாட்டின் கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக வீட்டிற்குத் திரும்பிச் சென்றுவிட்டனர் என்று தெரிவித்தார். 

ஹுவாபு நிறுவனம் எமக்கு அளித்த அறிக்கையில் நிறுவனத்தில் தற்போது சின்ஜியாங் தொழிலாளர்கள் வேலை செய்யவில்லை. என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அமேசான் நிறுவனத்தின் இங்கிலாந்து இணையத்தளத்தில் ஹுவாபு நூல் கொண்டு தயாரிக்கப்பட்ட தலையணைகள் விற்பனையில் உள்ளன. இருப்பினும் இந்த தயாரிப்பு BBC பார்வையிட்ட குறிப்பிட்ட தொழிற்சாலையுடன் சம்பந்தப்பட்டுள்ளதா அல்லது நிறுவனத்திற்கு சொந்தமான பிற தொழிற்சாலைகள் ஒன்றில் தயாரிக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. 

அமேசான் கட்டாய உழைப்பு பயன்படுத்துவதை சகித்துக் கொள்ளளாது என்றும், அதன் விநியோகச் சங்கிலித் தொடர் விதிகளை திருப்தி செய்யாத தயாரிப்புகளைக் கண்டறிந்தால், அவை விற்பனையிலிருந்து நீக்கப்படும் என்றும் அமேசான் BBCஇற்கு தெரிவித்தது. BBC சீனாவை தளமாகக் கொண்ட சர்வதேச பத்திரிகையாளர்களுடன் இணைந்து மொத்தம் ஆறு தொழிற்சாலைகளுக்கு சென்றது. குவாங்டாங் (Guandong) மாகாணத்தில் உள்ள டோங்குவான் லுஷோ (Dongguan Luzou) காலணி தொழிற்சாலையில், உய்குர் ஊழியர்கள் தனியான தங்குமிடங்களில் இருப்பதாக ஒரு தொழிலாளி கூறினார். அவர்களுக்கென்று தனியான உணவகமும் உள்ளதாக தெரிவித்தார். 

உள்ளூர்வாசி ஒருவர் அத்தொழிற்சாலை அமெரிக்க ஸ்கெச்சர்ஸ் (Skechers) நிறுவனத்திற்கு பொருட்களை உருவாக்குகிறது என்று கூறினார். உய்குர் தொழிலாளர் ஸ்கெச்சர்ஸ் தயாரிப்புக்களை உருவாக்குவதைக் காட்டும் உறுதிப்படுத்தப்படாத காணொலிகள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டிருந்தன. அவற்றுனூடாக இந்த தொழிற்சாலை ஸ்கெச்சர்ஸ் நிறுவனத்துடன் தொடர்பு படுத்தப்பட்டிருந்தது. கட்டாய உழைப்பை தாம் சகிப்பதில்லை என்று ஸ்கெச்சர்ஸ் ஓர் அறிக்கையில் கூறியது. ஆனால் அது டோங்குவான் லுஷோவை ஒரு உற்பத்தியாளராக பயன்படுத்தியதா என்ற கேள்விகளுக்கு அது பதிலளிக்கவில்லை. டோங்குவான் லுஷோ எமது கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. 

 அத்தொழிற்சாலையில் செய்யப்பட்ட நேர்காணல்களில், உய்குர் தொழிலாளர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் தொழிற்சாலையை விட்டு வெளியேற சுதந்திரம் இருப்பதாக தெரிய வந்தது. ஆனால் நாம் பார்வையிட்ட பிற தொழிற்சாலைகளில், அதற்காக சான்றுகள் தெளிவாக இருக்கவில்லை. குறைந்தது இரண்டு இடங்களில் சில கட்டுப்பாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. வூகான் நகரில் உள்ள தொழிற்சாலையில் இருந்த ஏறத்தாழ 200 உய்குர் தொழிலாளர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை என ஒரு ஹான் சீன ஊழியர் தெரிவித்தார். 

 தனது அரசியல் கல்விப் பயிற்சியைத் தொடங்க புசாயனப் தனது கிராமத்தை விட்டு வெளியேறிய மூன்று மாதங்களுக்குப் பிறகு, சீன அரசு-தொலைக்காட்சி குழுவினர் அவளை மீண்டும் சந்திக்கிறார்கள். இந்த முறை அன்ஹுயில் உள்ள ஹுவாபு ஆடை நிறுவனத்தில் சந்திப்பு நடக்கிறது. இம்முறை சீன கலாச்சாரத்தில் அவளின் ஒருங்கிணைப்பே செய்தி அறிக்கையின் மையப் பொருளாகும். 

 ஒரு காட்சியில், புசாயனப் தனது தவறுகளுக்காக திட்டு வாங்குகிறாள். அதனால் கண்ணீர் விடுகிறாள். ஆனால் இறுதியில், ஒரு மாற்றம் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. அதாவது பேசாமல் தலையைக் குனிந்து கொண்டிருந்த ஒரு பெண், தனது வேலைத்தளத்தில் அதிகாரம் பெறுகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. அவளின் வாழ்க்கை முறைகள் மாறுகின்றன, எண்ணங்கள் மாறுகின்றன. 

ஜோன் சட்வேர்த் – BBC செய்திகள், பெய்ஜிங் (John Sudworth, BBC News, Beijing) பங்குனி 3, 2021 
தமிழாக்கம் – நிமிர்வு 
 (மாசி - பங்குனி 2021 நிமிர்வு இதழ்)

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.