கொரோனா பேரிடர்காலத்தில் இணையவழிக் கல்வியின் அவசியம் (Video)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிய நிலையில் பல நாடுகளில் இன்னமும் ஊரடங்கு நிலை தொடர்ந்து வருகின்றது. இந்த நிலைமையானது மாணவர்களின் கல்வியிலும் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியுள்ளது.
இலங்கையிலும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பாடசாலைகள் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மாணவர்களின் கல்வியை எவ்வாறு பாதுகாப்பான முறையில் முன்னெடுப்பது என்கிற கேள்வி எழுகிறது. இனியும் பாடசாலைகள் மீள ஆரம்பிக்க சில மாதங்கள் ஆகலாம் எனும் நிலை உள்ளது.
தொடர்ச்சியாக பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் நிலைமையானது மாணவர்களின் கற்கும் ஆர்வத்தை வெகுவாக பாதிக்கும்.
இதனை ஈடு செய்ய இலங்கையின் பல பாகங்களிலும் அரசாங்கம், சில கல்வி சார்ந்த தன்னார்வ அமைப்புகள் மற்றும் சில சேவை மனப்பாங்குள்ள ஆசிரியர்களினாலும் இணையவழிக் கல்வி வழங்கப்பட்டு வருகின்றது.
கொரோனா பேரிடர்க் காலத்தில் பாடசாலைக் கல்வியின் தொடர்பறுந்து போகாத வண்ணம் “இணைய வழிக் கல்வித் திட்டம்” உதவுகின்றது.
இது தொடர்பில் பல பெற்றோர்களுக்கும், சில மாணவர்களுக்கும் கூட புரிதல் இல்லாத நிலையே உள்ளது.
யாழ்ப்பாணத்திலும் விரல் விட்டு எண்ணக்கூடிய சில ஆசிரியர்கள் இணையவழிக் கல்வி மூலம் மாணவர்களுக்கு படிப்பித்து வருகின்றனர்.
கல்வியமைச்சின் ஏற்பாட்டில் தொலைக்காட்சி மூலமும் கற்றல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாணத்தில் சிறகுகள் அமையம் மற்றும் சுவடி நிறுவகம் ஆகியவை முன்னெடுக்கும் இணைய வழி கற்றல் செயற்பாட்டில் மாணவர்கள் இணைந்து பயன்பெற முடியும்.
நூலகம் நிறுவனத்தின் ஆவணகம் செயற்திட்டத்தின் கீழ் http://aavanaham.org/உள்ள கல்வி வளங்கள் பிரிவில் சிறகுகள் அமையத்தினால் பாடக்குறிப்புகள், கடந்தகால வினாத்தாள்கள் ஏராளம் தரவேற்றப்பட்டுள்ளன. இவற்றையும் மாணவர்கள் பயன்படுத்த முடியும்.
பாடசாலைகள் விடுமுறை விடப்பட்டுள்ள காலப்பகுதியில் வீட்டில் இருக்கும் மாணவர்கள் தங்களது நேரங்களை இணையவழி கல்வியோடு இணைந்து பயன்மிக்கதாக மாற்றிக் கொள்ள முடியும்.
இணைய வழி கல்வி தொடர்பில் அடிப்படைப் புரிதலை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கமாகும்.
Post a Comment