பிணைமுறிக் கடன்களின் மறுசீரமைப்பு – பகுதி : 02



ஒரு நாட்டின் கடன்களை மறுசீரமைப்பது தொடர்பான நடவடிக்கைகளின் ஆரம்பத்தில் நடக்கும் பேச்சுவார்த்தைகளை பற்றி லீ புக்‌ஹைட் சொன்னவற்றின் ஒரு பகுதியை சென்ற இதழில் பார்த்தோம். அதன் இரண்டாம் பகுதியை இங்கு தருகிறோம். 

கடன் வழங்கும் வணிகர்களின் பார்வையில் IMF ஒரு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பண முறிச் சந்தையில் பல்லாயிரக்கணக்கான முதலீட்டார்கள் இருக்கிறார்கள். அவர்களில் கணிசமான பகுதியினர் ருரிட்டானியா குடியரசின் நிலையை ஆய்வு செய்து, அதற்கு கடன் மறுசீரமைப்பு அவசியமா, அல்லது அந்த கடன் மறுசீரமைப்பு ருரிட்டானியாவின் தேவைகளை பூர்த்தி செய்யுமா என்பது பற்றிய பார்வையை அவர்களால் உருவாக்க முடியும் என்று நம்புவது முட்டாள்தனம். ஆனால் வணிக கடன் வழங்குனர் ஒரு விடயத்தையிட்டு மிகவும் பயப்படுவர். உள்ளூர் அரசியல்வாதிகள் தமது அவமானகரமான வெட்கப்படக்கூடிய பொருளாதார சீர்கேட்டு வரலாற்றை ஏற்றுக் கொண்டு கடன் மறுசீரமைப்பை அறிவிக்கும் அதே வேளை, தமது ஆண்டவரின் வாளைத் தாங்கி இந்த கடனளித்தவர்களுடன் சண்டையிட்டு தமது கடன்களை சரி செய்வோம் என்று அவர்கள் சொல்லக் கூடும். ஏனென்றால், கடனளிப்பவர்களிடமிருந்து எவ்வளவுக்கு கடன் நிவாரணம் கடனாளி நாட்டுக்கு கிடைக்கிறதோ, அவ்வளவுக்கு குறைவாக ஒரு அரசியல்வாதி உள்ளூரில் பொருளாதார மாற்றத்தை செயல்படுத்த வேண்டும். அவர்களுக்கு வெளிநாட்டுக் கடனளிப்பவர்கள் முக்கியமல்ல, உள்ளூரில் வாக்களிக்கும் மக்களே முக்கியம். இதுதான் வணிக கடன் வழங்குனர்களுக்கு இருக்கும் பயம். 

ஒவ்வொரு பிணை முறிக்கடன் மறுசீரமைப்புக்கும் அடிப்படையில் இருப்பது எவ்வாறு அந்த கடன் சுமை கடனாளியாலும் கடனளித்தவராலும் பகிரப்பட வேண்டும் என்ற முடிவு தான். ருரிடானியாவின் நிதிநிலைமையை சரிசெய்வற்காக அதன் குடிமக்கள் மீது எவ்வளவு அசௌகரியம் சுமத்தப்படலாம், அதேவேளை கடன் வழங்கியவர்கள் எவ்வளவு கடன் நிவாரணத்தை ருரிடானியாவுக்கு வழங்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட வேண்டும். இந்த முடிவு ருரிடானியாவில் எவ்வளவு பொதுத்துறை பணியாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட வேண்டும், எவ்வளவு தூரம் வரிகளை உயர்த்த வேண்டும், எந்த மானியங்களை அகற்ற வேண்டும், எவ்வளவு ஓய்வூதியம் குறைக்கப்பட வேண்டும் என்பது போன்ற முடிவுகளை உள்ளடக்கும். இதுதான் அடிப்படை. நாங்கள் விரும்புகிறோமோ இல்லையோ இந்த முடிவை எடுக்கக் கூடிய அரசியல் சட்டபூர்வத் தன்மை மற்றும் அதைச் செய்வதற்கான திறமை ஆகிய இரண்டையும் கொண்டுள்ள ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே எங்களிடம் உள்ளது. அதுதான் சர்வதேச நாணய நிதியம் (IMF). 


நன்றி: IMF இணையத்தளம்
(https://www.imf.org/external/np/fin/tad/extarr2.aspx?memberKey1=895&date1key=201
8-09-30)

குறிப்பு:
SDR எனப்படுவது 1969 ஆம் ஆண்டு IMF இன் அங்கத்துவ நாடுகளின் உத்தியோக சொத்துக் கையிருப்புகளுக்கு மேலதிகமாக IMF ஆல் உருவாக்கப்பட்ட சர்வதேச சொத்துக் கையிருப்பின் அலகு. இதுவரை 660.7 பில்லியன் SDRகள் IMF இனால் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 2021 ஆவணி 2 ஆம் திகதி ஒதுக்கப்பட்ட ஆகக்கூடிய ஒதுக்கீடாகிய 456 பில்லியன் SDR உம் அடக்கம். இந்த ஒதுக்கீடு உலக நாடுகள் கோவிட் -19 பெருந்தொற்றுக்கு பின்னராக ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க உதவுவதற்காக ஒதுக்கப் பட்டுள்ளது. SDR இன் பெறுமதி அமெரிக்க டாலர், யூரோ, றெமிம்பி (சீனா), யென் (ஜப்பான்), பௌண்ட் (இஙகிலாந்து) என்பவற்றை அடிப்படையாக கொண்டது.


ஒரு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் போது, ஒரு மூன்றாம் தரப்பு (IMF) அது சம்பந்தமான முடிவுகளை எடுப்பது, அந்த மறுசீரமைப்பில் சேர அழைக்கப்பட்ட வணிகக் கடன் அளித்தவர்களின் பார்வையில் ஒரு சாதகமான விடயம். முடிவுகளை IMF எடுக்கும், ஆனால் அதனை வெளியில் சொல்லாது. ஆனால் நீங்கள் ஒரு நாட்டிற்கான IMF திட்டத்தைப் பார்த்தால், அந்த பட்டியலில் கடன் நிவாரணத்திற்காக ஒரு குறிப்பிட்ட தொகை ஒதுக்கப் பட்டிருப்பதை காணலாம். அந்த தொகையே வணிக கடன் வழங்குபவர்களின் தலைவிதியை வெளிப்படையாக வரையறுக்கிறது. IMF அந்த தொகையை எப்படி பயன்படுத்துவது என்று ஒரு நாட்டிற்குச் சொல்லாது, ஆனால் இந்தத் தொகைக்கு மேல் நீங்கள் செலுத்தக்கூடாது என்று அவர்கள் சொல்வார்கள். அப்படி செலுத்தினால் அந்த திட்டம் உடைந்து போகும். அதனை மீண்டும் புதிதாக ஆரம்பிக்க வேண்டி வரும். 

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் மிகவும் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்றாக நான் இதனை நினைக்கிறேன். இது பல ஆண்டுகளாக இந்த துறையில் பணியாற்றியதிலிருந்து நான் கண்டறிந்தது. வணிகக் கடன்வழங்குனர்கள் ஒரு கடனாளி நாட்டுடன் இணைந்து ஒரு கடன் மறுசீரமைப்பில் ஈடுபடும் பொழுது, அவர்கள் பெரும்பாலும் பார்க்கத் தவறுவது என்னவென்றால் அந்த நடவடிக்கையின் விளைவு பெரும்பாலும் முன்னரே தீர்மானிக்கப்பட்டு விட்டது என்பது. எந்த நிதி அமைச்சரும் IMF கூறியுள்ளதுக்கு விட மேலாக வணிகக் கடன் வழங்குனர்களுக்கு பணம் செலுத்தும் வற்புறுத்தலுக்கு இணங்கக் கூடாது. அப்படி இணங்கும் பட்சத்தில் முழு திட்டமும் சிக்கலுக்கு உள்ளாகும். ஆனால் இறையியலைப் போலவே பிணைமுறிக் கடன் மறுசீரமைப்பிலும் அங்கு இருப்பவர்களுக்கு தமது முடிவுகளை தாமே எடுப்பதற்கான சுதந்திரம் உள்ளது என்ற மாயையை அவர்கள் மத்தியில் உருவாக்குவது பல சமயங்களில் உபயோகமானது! 

முதலாவது கேள்வி, யாருடைய கடன் மறுசீரமைக்கப்படும், யாருடையது மறுசீரமைக்கப் படாது? இங்கே பொதுவான விதிகள் உள்ளன. நீங்கள் ஒரு நாட்டுக்கு பிணைமுறி மூலம் கடன் வழங்குபவராக இருந்தால், எந்த மறுசீரமைப்பு விவாதத்திலும் உங்கள் முதல் நோக்கம் அதிலிருந்து வெளியேறும் வழியைப் பேசுவதே. அதாவது, விலக்கு அளிக்கப்பட்ட கடன் என்று பெயரிடப்படும் ஒரு வகைக்குள் உங்களை வைக்க கடனாளி நாட்டை வற்புறுத்துவதே உங்கள் நோக்கமாக இருக்கும். அவ்வாறன விலக்கு அளிக்கப் பட வேண்டும் என்று நீங்கள் கோருவதற்கான காரணம் நம்பத்தகுந்ததாக இருக்க வேண்டும். 

இந்த விலக்களிக்கப்படும் கடன் வழங்குனர் பட்டியலில் மிகவும் மேலே இருப்பவை பன்னாட்டு நிதி நிறுவனங்கள். IMF, உலக வங்கி மற்றும் பிராந்திய வங்கிகள், உதாரணமாக ஆசிய அபிவிருத்தி வங்கி, ஆகியவை பட்டியலில் மேலே இருப்பார்கள். அதற்கு அவர்களின் சாக்கு, தாங்கள் வேறு யாரும் கடன் கொடுக்க முன்வராத போது கடன் கொடுப்பவர்கள் என்பது. இது அமெரிக்காவில் ஒரு நிறுவனம் சட்டப்படி திவாலான நிலைக்குச் செல்லும் போது நடப்பதைப் போன்றது. சட்டப்படி திவாலான நிலைக்குச் செல்லும் ஒரு நிறுவனம் புதிய கடன்களை வாங்க முடியும். ஆனால் அந்த நிறுவனம் கலைக்கப் படும் நிலை வருமானால் அந்த கலைப்பினால் வரக்கூடிய பணத்தை பெறுவதற்கு புதிய கடன் கொடுத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

 இந்த பன்னாட்டு நிதி நிறுவனங்களுக்கு கீழே அடுத்து இருப்பவை பன்னாட்டு நிதி நிறுவனங்களை போன்று வர முயற்சிக்கும் நிறுவனங்கள். அவர்கள் தமக்கு அரசாங்கங்களுடன் இணைப்பு இருப்பதாக சொல்வார்கள். இந்த வகையில் கரீபியன் அபிவருத்தி வங்கி, ஐரோப்பிய முதலீட்டு வங்கி மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி போன்றவை அடங்கும். 

இவர்களுக்குக் கீழே இருக்கும் அடுத்த குழுக்களைப் பார்ப்போமானால், அவர்கள் தமது கடனை மறுசீரமைத்தால் கடனாளி நாட்டுக்கு மோசமான விளைவுகள் ஏற்படும் என்று வாதிடுபவர்களாக இருப்பார்கள். இந்தக் குழுவுக்கு சிறந்த உதாரணமாக இருப்பவர்கள் வர்த்தக கடன் வழங்குனர்கள் மற்றும் பொருட்களின் விற்பனையாளர்கள். வர்த்தக கடன் இல்லாமல் ஒரு நாடு இருக்க முடியாது என்ற வாதத்தை முன்வைத்து அவர்கள் பொதுவாக கடன் மறுசீரமைப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும். அல்லது குறைந்தபட்சம் சில சலுகைகளை பெற முடியும். 

பிணைமுறிக் கடன் மறுசீரமைப்புகளில் குறுகிய கால அரசாங்க கடன்களை விலக்குவது வழக்கமானதாகிவிட்டது. உதாரணமாக அரசாங்கத்தால் விற்கப்படும் குறுகிய கால நாணயமுறிகள். ஏனென்றால், கடன் மறுசீரமைப்பிற்குப் பின் வரும் காலத்தில் உடனடியாக ஒரு நாடு பிணைமுறி வணிக சந்தையை அணுக முடியாது. ஆனால் அந்த நாட்டுக்கு மறுகடனெடுத்தற் தேவை இருக்கும். எனவே குறுகிய கால நாணய முறிகள் போன்றவை கடன் மறுசீரமைப்பில் இருந்து விலக்கப் படுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்றாகி விட்டது. 

நீங்கள் ஒரு கடன் வழங்குனராக இருந்தால் எந்த கடன் மறுசீரமைப்பு விவாதத்திலும் உங்கள் முதல் நோக்கம் அதிலிருந்து வெளியேறும் வழியைப் பார்ப்பதே என்று இதுவரை கதைத்தோம். இரண்டாவது பொது விதி என்னவென்றால், அதிலிருந்து வெளியேறும் வழியை உங்களால் அடைய முடியாவிட்டால், மற்ற கடன் வழங்குனர்கள் அனைவரையும் அதில் இணைக்க வேண்டும் என்று நீங்கள் வலியுறுத்த வேண்டும். ஏனென்றால், இது ஒரு வகையில் எவருக்குமே வெற்றி கிடைக்காத ஒரு விளையாட்டு. எவ்வளவுக்கு எவ்வளவு கடன் அளித்தவர்கள் கடன் மறுசீரமைபைப்பில் பங்கேற்கிறார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு ஒரு தனி கடனளிப்பாளருக்கான பாதிப்பு குறைவாக இருக்கும். அதாவது நீங்கள் கொதிக்கும் எண்ணெய்ச் சட்டியில் இருக்கிறீர்கள் என்று உணரும் பட்சத்தில் மற்ற எல்லோரையும் அந்த எண்ணெய்ச் சட்டிக்குள் இழுத்து விடுமாறு கடனாளி நாட்டுக்கு அழுத்தம் கொடுப்பது உங்கள் நோக்கமாக இருக்க வேண்டும். 

இந்தக் கட்டத்தில், சில வகையான கடன்கள் மறுசீரமைப்பிலுருந்து விலக்கப்பட வேண்டும் என்ற கடனாளி நாடு வாதிட்டால் அந்த வாதத்தை கணிசமான சந்தேகத்துடன் நீங்கள் ஆராய வேண்டும். இதற்கு சிறந்த உதாரணம், “உள்ளூர் கடன்வழங்குனர்களின் கடன்களை மறுசீரமைக்க நாம் விரும்பவில்லை” என்று கடனாளி நாடு வெளிநாட்டு கடன் வழங்குனர்களுக்கு சொல்லும். அதற்கு காரணம், முதலாவது, உள்ளூர் கடன் வழங்குனர்கள் வாக்களிப்பவர்களாக இருப்பார்கள், இரண்டாவது, இந்த கடன் வழங்குபவர்கள் பல உள்ளூர் நிதி நிறுவனங்களாக இருப்பார்கள். "இந்த கடன்களை மறுசீரமைக்க எங்களை கட்டாயப்படுத்தினால் எமது உள்ளூர் வங்கிப் பொறிமுறையின் தலையை நாங்கள் இழக்க வேண்டி வரும். இந்த கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை ஊடாக நாம் சேமிக்கும் ஒவ்வொரு டாலரும் அந்த வங்கிப் பொறிமுறையை மீளக் கட்டமைப்பதில் செலவழிக்க வேண்டி வரும்.” இவ்வாறான வாதங்களை கடனாளி நாடு முன்வைக்கும். 

அடுத்த இதழிலும் தொடரும்...

தமிழாக்கம் - நிமிர்வு 

நிமிர்வு ஆடி 2022 இதழ்



1 comment:

  1. A giant majority of the adult population of countries where playing is authorized participate. Online playing is the process of playing in} on line casino games or betting on sports activities occasions on the internet. Online on line casino playing contains slot machines, desk games and video poker. Online sports activities playing involves wagering on the result result} of any sports activities occasion where betting is on the market. The pleasure and enjoyable of betting 점보카지노 at the racetrack or in a on line casino depends on figuring out gaming companies staff are sustaining the home rules.

    ReplyDelete

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.